வி.தங்கராஜ் எம்.ஏ., எம்.எல்,
கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே உடுமலையில் தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் என்கிற வரலாற்று ஆய்வுநூல் வெளியிடப்பட்போது அந்நூலுக்கு நான் எழுதிய அணிந்துரையை தற்போது தளி எத்திலப்ப நாயக்கர் மணிமண்டபம் மற்றும் சிலை திறப்புவிழா சமயம் பொருத்தம் கருதி வாட்ஸ்அப் தளங்ளில் பதிவுசெய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். A post by V. ThangarajMA,ML.
வி.தங்கராஜ் எம்.ஏ., எம்.எல், மாநிலப்பொதுச்செயலாளர்,தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம், மதுரை (பதிவு எண் :08/1983)
ஆசிரியர்ஃ வெளியீட்டாளர், வீரபாண்டிக் கட்டபொம்மன் திங்களிதழ்,
முனைவர் பட்ட ஆய்வாளர், காந்தி கிராமப் பல்கலைக்கழகம்,
அணிந்துரை
சிங்கமநாயக்கனின் மகன் கம்பிளி நாயக்கன் ஆட்சிக்காலத்தில் சின்னஞ்சிறிய நாட்டையும், கம்பிளிக்கோட்டையையம் முகமதியப்படைகள் தாக்கி அழித்தன. அந்த கம்பளி நாட்டின் இடிபாடுகளின் மீதுதான் மாபெரும் விஜயநகர சாம்ராஜ்யம் தோன்றியது. விஜயநகர சாம்ராஜ்யம் தெற்கு நோக்கி தமிழகத்தில் வந்து நிலைகொண்டனர். அவர்களின்ல மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் தொட்டிய நாயக்கர் அவர். இவர்கள் கம்பளத்தார்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். தெலுங்கு மொழி, பேசும் இவர்களை இனவரையில் வல்லுநர் எட்கர் தர்ஸ்டன் தொட்டியர் அல்லத கம்பளத்தார் என்றே குறிப்பிடுகின்றார். விஜயநகரப் படைகளில் படைத்தலைவர்களாகவும், படைவீரர்களாகவும் தமிழகத்திற்கு வந்து சேர்ந்தவர்கள் இவர்கள் என அவர் குறிப்பிடுகின்றார்.
விஜயநகர சாம்ராஜ்யம் தமிழகத்தில் முதலில் மதுரையில் தான் நாயக்கமன்னர் ஆட்சியைத் தோற்றுவித்தது. மதுரைநாட்டின் முதல் நாயக்கமன்னராக நாகம நாயக்கரின் மகன் விசுவநாத நாயக்கர் கி.பி. 1529 ல் பதவியேற்றுக்கொண்டார். பின்னிட்டு 1535 ஆம் ஆண்டில் அவர் மதுரை நாட்டை நிர்வாக வசதிக்காக72 பாளையப்பட்டுக்களாகப் பிரித்த போது கிட்டத்தட்ட 60 பாளையப்பட்டுக்ளளை இந்த தொட்டியர், கம்பளத்தார் வசமே ஒப்படைத்தார். விஜயநகரப்பேரரசர்களின் அறிவுரையோ, அனுமதியோ இன்றி அவர் அவ்வாறு செய்திருக்க இயலாது. ஆக விஜயநகரப்பேரரசர்களும், மதுரை நாயக்க மன்னர்களும் சேர்ந்து கிட்டத்தட்ட மதுரை நாடு முழுவதையும், ஏன் இந்த தொட்டியர் கம்பளத்தாரின் நிர்வாகத்தில் ஒப்படைத்தார்கள் என்பது இன்றளவும் ஆய்வுக்குரிய அம்சமாகவே இருந்து வருகிறது.
இந்த தொட்டியர்ஃகம்பளத்தார் ஆண்ட பாளையப்பட்டுக்கள் 'கம்பள பாளையப்பட்டுக்கள்' என அழைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் தளி பாளையப்பட்டும் ஆகும். பின்னிட்டு பாளையப்பட்டு ஆட்சிமுறை மாற்றப்பட்ட போது பாளையக்காரர்கள் எல்லாம் படை பலத்தை இழந்து வெறும் ஜமீன்தார்களாக ஆக்கப்பட்டனர். அதன் பின் ஜமீன் ஒழிப்புச்சட்டம் அமுலுக்கு வந்த பிறகு ஜமீன்தார்கள் எல்லாமே குடிமக்களாகவும், விவசாயிகளாகவும் மாறினர். இத்தகைய ஜமீன்தார்களின் வாரிசுகள், உறவினர்கள் உள்ளிட்ட தொட்டிய கம்பளத்தார் சமூக மக்கள் தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் , கரூர்,திருப்பூர், கோயம்புத்தூர்,ஈரோடு, சேலம்,நாமக்கல், திருச்சி ,விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
தென்னிந்தியாவில் பாளையக்காரர்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்த போதுதான் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியை ஆங்கிலேய அரசே எடுத்துக்கொண்டு நிர்வாகம், வரி வசூல் என இறங்கியது. ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களைத்தான் விடுதலைப்போர் என வர்ணிக்கின்றோம். அந்நிய ஆதிக்கத்துக்கு எதிரான முதல் போராட்டத்தையே 'முதல் விடுதலைப்போர்' என அழைக்கின்றோம். அந்த வகையில் தென் தமிழ்நாட்டின் தென் கோடியில் திருநெல்வேலிச் சீமைப் பகுதியில் பாஞ்சாலங்குறிச்சி பாளையப்பட்டினை ஆண்டு வந்த வீரபாண்டியக்கட்டபொம்மன்தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முதல் விடுதலைக்குரலை எழுப்பி முதல் விடுதலைப்போரையும் நடத்தியவன் என வரலாறு கூறுகிறது.
வீரபாண்டியக் கட்டபொம்மன் கி.பி. 1790 ஆம் ஆண்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளான். அதுவரையிலும் ஹைதராபாத் நிஜாம் மற்றும் ஆற்காடு நவாப்ஆகியோர்தான் பாளையப்பட்டுகளில் வரிவசூல் செய்யும் உரிமையைப்பெற்றிருந்தனர். அவ்வப்போது அவர்களுக்காக அவர்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் ஆங்கிலேயர்களும் வரி வசூல் செய்துள்ளனர். எனவே, கி.பி. 1790 ஆம் ஆண்டிற்கு முன்னதாக நிஜாம் மற்றும் நவாப் போன்றவர்களின் முகவர்களாக, பிரதிநிதிகளாக ஆங்கிலேயர்கள் வரி வசூல் செய்ய வந்த சமயங்களில் அவர்களை எதிர்த்துப் போராடியவர்களை முதல் விடுதலைக்குரல் எழுப்பியவர்கள் என்றோ, விடுதலைப்போர் பரிந்தவர்கள் என்றோ சொல்ல இயலாது. ஆனால் கி.பி. 1790 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதவாக்கில் ஆங்கிலேய அரசு தம்மிச்சையான ஒரு பிரகடனத்தின் மூலம் பாளையப்பட்டுக்களில் வரி வசூல் செய்யும் உரிமையைத் தானே எடுத்துக்கொண்டது. தனித்த உரிமையோடும், முழு நிர்வாக உரிமை கொண்டாடியும் வரி வசூலில் இறங்கி அதற்காக திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி பகுதிகளுக்கு தனித்தனி கலெக்டர்கள் நியமனம் செய்தது. கி.பி. 1792 ல் தான் ஆங்கிலேய அரசு வரி வசூலுக்காக நிரந்தர அளவைகள் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதன் பேரில் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தில் நில அளவு எல்லைகளைத் தணிக்கை செய்வதற்கு வந்த லெப்டினன்ட் கர்னல் மேக்ஸ்வெல் என்பவனைக் காண மறுத்து அவனோடு வந்த ஆட்களையும் விரட்டியடித்த 16.02.1792 அன்று ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான தனது முதல் விடுதலைக்குரலை எழுப்பிப் பதிவு செய்தான் மாவீரன் வீரபாண்டியக் கட்டபொம்மன்.
அதன் பிறகு அவன் எந்தக் காலகட்டத்திலும் ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கு அடிபணியவுமில்லை. வரியும் செலுத்தவில்லை. ஆங்கிலேய அதிகாரிகள் பல ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து பார்த்தும் அவன் அசையவில்லை. இப்படி பல ஆண்டுகளாக வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரி வசூலிக்க இயலாமல் போன விரக்தியில் 05.09.1799 அன்று ஆங்கிலேயப் படைகள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டு போர் தொடுத்தன. அதைத் தீரமுடன் எதிர் கொண்ட கட்டபொம்மன் முதல் நாள் போரில் அதாவது 05.09.1799 அன்று நடந்த போரில் வெற்றியையும் ஈட்டினான். அதன் பின் அவன் வஞ்சகத்தால் கைதியாக்கப்பட்டு, 16.10.1799 அன்று கயத்தாற்றில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்படும் வரை ஆங்கிலேய அரசு மீதான எதிர்ப்பினை கைவிடவே இல்லை. இப்படி ஆங்கிலேய அரசு தனித்தன நிர்வாக உரிமை கொண்டாடி அதிகார பலத்தோடு கட்டாய வரி வசூலில் இறங்கிய போது அதை எதிர்த்து முதல் விடுதலைக்குரல் எழுப்பியது வீரபாண்டிய கட்டபொம்மனே என்றும் அந்த வகையில் அவன் 05.09.1799 அன்று ஆங்கிலேயருக்கு எதிராக வெற்றிகரமாக நடத்திய போரே முதல் விடுதலைப்போராகும். ஏன்றும் நந்திவர்மன் ஜீவன் என்கிற வரலாற்று ஆய்வாளர் தனது 'முதல் விடுதலைப்போர்' என்கிற வரலாற்று ஆய்வு நூலில் தெளிவாகத் தீர்வு கண்டுள்ளார்.
'உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்' என்ற ஆய்வுஅமைப்பு செயல்பட்டு வரும் உடுமலைப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதி தென்கொங்கு நாடு என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலிச் சீமையிலே வீரபாண்டிய கட்டபொம்மன் முதல் விடுதலைக்குரலை எழுப்பி முதல் விடுதலைப்போரையும் நடத்தி இருப்பதைப் போல தமிழகத்தின் இதர பகுதிகளில் யார் யார் அப்படி தேச விடுதலைக்காக முதல் விடுதலைக்குரல் எழுப்பியுள்ளார்கள்? யார் அப்படி முதல் விடுதலைப்போரை நடத்தியுள்ளார்கள்? எனக் கண்டறியும் ஆர்வம் பொதுவாக அந்தந்த பகுதி மக்களுக்கு நிச்சயம் இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த வகையில், ' உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்' தென் கொங்கு பகுதியில் யார் அப்படி ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து முதல் விடுதலைக்குரல் எழுப்பியது? யார் முதல் விடுதலைப்போரை நடத்தியது? எனக் கண்டறியும் முயற்சியில் இறங்கி,'தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர்' எனும் இந்த அருமையான நூலைவெளிக்கொணர்ந்துள்ளது. ஆய்வு நடுவத்தின் இந்த அரிய முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது ஆகும்.
உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம் எந்த ஒரு சமுதாய சார்புக்கும் உட்பட்டதல்ல. அது ஒரு பொது அமைப்பு ஆகும். சாதி, மத சமுதாய அமைப்புகளைக் கடந்த பல்வேறு ஆய்வாளர்கள், சான்றோர்கள், ஊடகநிபுணர்கள் அதில் அங்கம் வகிக்கின்றனர். உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதாவது தென்கொங்கு நாட்டில் நடந்த வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்து ஆவணமாக்கி வெளியிடும் முயற்சியில் இந்த ஆய்வு நடுவம் இறங்கியுள்ளது என்று தெரிகிறது. இந்த ஆய்வு நடுவத்தின் பாரபட்சமற்ற தேடலுக்குப் பின் முறையான ஆய்வுக்குப்பின் அவர்கள் கண்டறிந்த உண்மை என்னவெனில் தென்கொங்கு நாட்டில் முதல் விடுதலைப்போரை நடத்தியது தளி பாளையப்பட்டினை ஆண்டு வந்த தளி எத்தலப்பர் மன்னர் என்பதே ஆகும். இந்த தளி பாளையப்பட்டு என்பது ஆதியில் ஏற்பட்ட தெலுங்கு மொழி பேசும் கம்பள பாளையப்பட்டுக்களில் ஒன்று என்பதை நாம் ஏற்கனவெ பார்த்தோம். வீரபாண்டிய கட்டபொம்மனைப்போல இந்த எத்தலப்ப மன்னரும் தொட்டியர்ஃ கம்பளத்தார் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்தான் அவருடைய முழுமையான பெயர் எத்திலப்ப நாயக்கர் என்பதே ஆகும். ஒரு பொது அமைப்பான உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம் எத்திலப்ப நாயக்கரை சமுதாய ரீதியில் பார்க்காமல் எல்லா சமுதாய மக்களையும் உள்ளடக்கி ஒரு பாளையப்பட்டினை ஆண்ட அரசர் என்ற ரீதியில் பார்த்து அவரை 'எத்திலப்ப மன்னர்' என்றே குறிப்பிட்டு இருப்பது ஏற்புடையதாகும்.
உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம் வெளிக்கொண்டுவந்துள்ள தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர்' என்ற வரலாற்று ஆய்வு நூலின் கருதுகோள் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற விடுதலைப்போராட்ட வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படுத்துவது என்று தெரிகிறது. அந்த வகையில் இந்த நூலை மொத்தம் ஐந்து இயல்களாகப் பிரித்து தொகுத்துக் கொடுத்துள்ளனர். பகுதி ஒன்றில் தென்கொங்கு நாட்டின்பூகோள அமைப்புகளை அவர்கள் விவரித்துள்ளனர். பகுதி இரண்டில் தளி பாளையப்பட்டு பகுதியில் மக்களின் வாழ்வியல் முறைகளை விவரித்துள்ளனர். பகுதி மூன்றில் தளி பாளையப்பட்டின் தனித்துவமான ஆட்சிமுறை விவரித்துக் கூறப்பட்டுள்ளது. பகுதி நான்கில் பாளையப்பட்டுக்களில் நடைபெற்று வந்த இரட்டை ஆட்சி முசை விவரிக்கப்பட்டுள்ளது. பகுதி ஐந்தில் ஆங்கிலேயருக்கு எதிரான எத்திலப்ப மன்னரின் விடுதலைப்போர் நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டு அது எவ்வாறு முதல் விடுதலைப் போரில் தளி பாளையப்பட்டின் பங்கு குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. எல்லா பகுதிகளுக்கும் ஆதாரமாகக் கொடுக்கப்பட்டுள்ள அடிக்குறிப்புகள் ஏராளம்.
நூலின் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ள செய்திகளில் ஆங்கிலேய ஒற்றன் ஆண்ட்ரு கேதீசு பற்றிய செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 16.10.1799 ல் ஆங்கிலேயர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனை வரிகட்ட மறுத்த காரணத்தைச் சொல்லித் தூக்கிலிட்டுக் கொன்றதை மனதில் வைத்து குமுறிக்கொண்டிருந்த எத்திலப்ப மன்னர் 23.04.1801 ல் தளி பாளையப்பட்டிற்கு வரி வசூலுக்குவழிவகை செய்து கொடுக்க ஒற்றனாக வந்த ஆங்கிலேய அதிகாரி ஆண்ட்ரு கேத்தீசு என்பவனைப் புளியமரத்திலே தூக்கிலிட்டுக் கொன்று ஆங்கிலேய அரசினைப் பழி தீர்த்தார். வரி செலுத்த மறுத்த பாளையக்காரர்கள் எல்லாம் ஆங்கிலேயர்கள் தூக்கில் போட்டுக்கொன்றார்கள் என்கிற செய்திகளையே படித்துப் படித்து நொடிந்து போன நமக்கு வரி வசூலிக்க வந்த ஆங்கிலேயனையே தூக்கில் போட்டுக் கொன்று பழிதீர்த்தார் எத்தலப்ப மன்னர் என்கிற செய்தி ஓர் புதிய செய்தியாக மட்டுமல்லாது புத்துணர்வு ஊட்டுகிற செய்தியாகவும் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இத்தகைய அரிதான வீரத்தைக் காட்டிய எத்திலப்ப மன்னரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எனவே அவரது அரிதான தீரச்செயல் என்றென்றும் நினைவு கூறப்படும் வகையில் அவருக்காக தமிழக அரசு ஒரு மணி மண்டபத்தை எழுப்பித் தருமாயின் தேசப்பற்றுள்ள அனைவருக்குமே அது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயமில்லை. எனவே இதையே தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையாக வைத்து இந்த அணிந்துரையை நிறைவு செய்கிறேன்.நன்றி, வணக்கம்,
நல்வாழ்த்துக்களோடு
வி.தங்கராஜ் எம்.ஏ., எம்.எல்.,🙏🥰📗✒️📡🎙️

Comments
Post a Comment