கன்னி நாய்கள்......Siva Siddhu R * இந்து தமிழ் திசை இதழில் 2017 ஆண்டு வெளியான என் கட்டுரை படம் : 2015 ல் ( நானும் - தங்கமணியும் )
கன்னி நாய்கள்
நல்ல கூரான நீண்ட முகம், சிறிய தலை, நன்கு கீழிறங்கிய மார்பு, மெலிந்த-நீளமான உடல், மிகக்குறைந்த ரோமம், நீண்ட மெல்லிய வால் ஆகியவற்றுடன்தான் கன்னி நானுடைய தோற்றம் அமைந்திருக்கும்.
மேற்கூறிய தோற்றத்துடன் வேட்டை நாய் கருப்பு நிறத்தில் வந்தால் கன்னி என்றும் அதே தோற்றத்துடன் வேறு நிறத்தில் இருந்தால் அது ‘சிப்பிப்பாறை’ என்றும் முன்பு கூறப்பட்டுவந்தது. பின்னர், இரண்டு நிறம் கொண்டவையும் ஒரே வகைதான், நிறம் மட்டுமே மாறுபடுகிறது என்று கருதப்பட்டது. ஆனால் இந்த ரெண்டு பெயர் மட்டும் அல்லாது இவற்றுக்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டுவந்தன: உதாரணமாக பொடித்தல நாய், ஊசிமுஞ்சிநாய், கூழைவால் நாய், குவளைவாய் நாய், மொசக்கடி நாய், குருமலை நாய், குருந்தன்மொழி நாய், தோல்நாய்...
விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறை ஊரைச் சார்ந்த சாம்பல் நிற நாய்கள் மூலமாகத்தான் இந்த நாய்களுக்கு சிப்பிப்பாறை என்ற பெயர் முதலில் வந்தது. நாளடைவில் அந்த நாய்கள் அழிந்துபோக சிப்பிப்பாறையைச் சுற்றியிருந்த ஊர்களைச் சேர்ந்த மற்ற நாய்களுக்கும் அதே பெயர் வழங்கப்பட ஆரம்பித்தது.
யார் இந்த ‘கன்னி’?
இந்த நாய்க்குக் கன்னி என்று பெயர் வந்ததற்கு என்ன காரணமாக இருக்கும்? திருமணத்தின்போது சீதனமாக இந்த நாயைக் கொடுப்பதால், இதற்குக் ‘கன்னி’ என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால்,
அது கட்டுக்கதை.
இந்த நாய்களை ‘பொலிகார்ஸ் ஹவுண்ட்’ என்றே ஆங்கிலேயர்கள் அழைத்தனர். எந்த இனக்குழு இந்த நாய்களை ஆதியில் அறிமுகம் செய்ததோ, அந்த இனக்குழுவின் பெயருடன் சேர்த்து அழைப்பது ஆங்கிலேயர்களின் வழக்கம்.
நாயக்கர் ஆட்சியின்போது மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு அதற்கானத் தளபதிகளை நியமனம் செய்யப்பட்டிருந்தனர். அந்தத் தளபதிகள்தான் பொலிகார்கள்.
ஃபிளாரென்ஸ் அம்ஹெர்ஸ்ட் என்பவர், 1909-ம் ஆண்டு வெளியான தனது ‘ஓரியண்டல் கிரேஹவுண்ட்ஸ்’ எனும் கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:
“பொலிகார் நாய்கள் மதராஸ் மாகாணத்துக்கு உரியவை. அவை தாங்கிவரும் பெயர் ஆந்திர, கர்நாடகப் பகுதியிலிருந்து வந்த படைகளின் தலைவர்களுடையவை. அவர்களே இந்த நாயின் அசலான உரிமையாளர்கள். அவை ரோமம் அற்ற தோலும் உடல் வலுவும் கொண்டவை. அதன் தோற்றம் ‘கிரேஹவுண்ட்’ நாய்களைப் போன்றதாக உள்ளது” என்று
நிறம் தந்த பெயர்
அதற்கும் 70 ஆண்டுகளுக்கு முந்தைய பதிவு ஒன்றில் ‘பொலிகார்கள், வேட்டையாடுவதில் அதிகம் உவகை கொண்டவர்கள். அதனால் அதிகளவு நாய்களை வைத்திருந்தார்கள். அத்துடன் கால்நடைகளையும் நாய்களையும் அடிக்கடி பண்டமாற்றம் செய்துகொண்டனர். அவர்கள் தெலுங்கு மொழி பேசும் கம்பளத்தார்கள்’ என்று கிழக்கிந்தியக் காலனி இதழின் 10-வது தொகுப்பில் ‘அக்கவுண்ட்ஸ் ஆஃப் தொட்டியர்ஸ்’ என்ற கட்டுரையில் கூறப்படுகிறது.
இன்றளவிலும் கம்பளத்து நாயக்கர்கள் வாழும் கிராமங்களில் இந்த நாய்கள் அதிகளவில் காணப்படுவதே இதற்குச் சாட்சி. அவர்களிடமிருந்து, இடையர் குல மக்களிடம் இந்த நாய்கள் அதிக அளவில் பரவின. இடையர்கள் மூலம் வந்த பெயர்தான் ‘கன்னி’.
கன்னி என்பது நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஆட்டு இனம். இவை கரு நிறத்திலும், கண்ணுக்கு மேலேயும், தாடைப் பக்கத்திலும், கால்களிலும் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்துடன் இருக்கும். அவற்றைப் போன்ற நிறத்தில் இருந்த இந்த நாய்களுக்கும், அதே பெயர் வழங்கப்பட்டது.
சரி கன்னி நாய் மூதாதையர் தமிழகம் வந்ததை பார்த்தோம். சொல்லப்போனால், இந்தக் கூர்நாசி நாய்கள் இந்தியாவுக்கே புதியவைதான். முகலாயர் ஆட்சியின்போதுதான் அரேபிய, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து அதிக அளவில் ‘ஸ்லோகி ஹவுண்ட்ஸ்’ எனப்படும் நாய் இனம் இந்தியாவை வந்தடைந்தது!
இன்றைக்கும் deccan நில் வாழ்ந்துகொண்டிருக்கும் ‘காரவன் ஹவுண்ட்’ அல்லது ‘முதோல் ஹவுண்ட்’ நாய் இனம், ஸ்லோகி ஹவுண்ட் வழியாகப் பிறந்ததே. அதுவே தக்காணப் பீடபூமிக்குப் பரவி இங்கு வந்தது.
அதன்பிறகு ஆங்கிலேயர்கள் வேட்டையாடுவதற்காக ‘மெட்ராஸ் ஹன்ட் கிளப்’பை உருவாக்கி ஆயிரக்கணக்கிலான நாய்களை இறக்குமதி செய்தனர். அவற்றில் பல நமது மண்ணின் வெப்பத்தைத் தாங்காமல் இறந்து போயின. மீதமிருந்த நாய்களையும், மத்திய ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்லோகி இன நாய்களையும் நம்முடைய ‘பொலிகார் ஹவுண்ட்’களுடன் சேர்த்து கலப்பினத்தை ஏற்படுத்தினர். அது மீண்டும் பொலிகார்களிடம், அதிகஅளவிலான கூர்நாசி நாய்களைக் கொண்டு சேர்த்தது.
ஜமீன்கள் வளர்த்த நாய்கள்
காலப்போக்கில் அந்நிய நாய் இனங்களில் ஜமீந்தார்கள் ஆர்வம்கொள்ள, இந்த நாய்கள் எளிய மக்களிடம் சென்றடைந்தன. அவர்கள்தான் அதை விடாமல் இன்றுவரை பாதுகாத்துவருகின்றனர்.
இப்படியான பல வழிப் பகிர்வு மூலம் உருவானதே இந்த 'கன்னி நாய்'. இன்று தென் மாவட்டங்களில் அதிக அளவில் பல சமூகத்தினராலும் இந்த வகை நாய்கள் வளர்க்கப்படுகின்றன.
குருவழி பயிலுதல்
இன்றளவிலும் இந்த நாய்கள் பற்றிய அறிவு ‘குருவழி பயிலுதல்’ மூலம்தான் நடைபெறுகின்றது. குருவிடம் நாய்களைத் தேர்வு செய்வதையும் அதன் நுணுக்கங்களையும் அடுத்தடுத்த தலைமுறையினர் அறிகின்றனர். அன்றைய காலகட்டத்தில், குட்டிகளை விற்கும் வழக்கம் இல்லை. எனவே, தேவை ஏற்படும்போது மட்டும் நாய்களை இணை சேர்த்து அந்தக் குட்டிகளில் சிறந்ததைத் தேர்வு செய்து, மீதம் உள்ள குட்டிகளைக் கொன்றுவிடும் வழக்கம் இருந்தது.
அப்படித் தேர்வு செய்யப்பட்டு வளர்ந்த நாய்களின் குட்டிகளையே குருநாதரிடமிருந்து பெறுகின்றனர். அவர்களைக் கவுரவிக்கும் பொருட்டு இது ‘இன்னார் இனவழி வந்தது’ என்று தனது குருநாதர் பெயரை முன்மொழிந்து நாய்களை வழங்குவார்கள். அன்றும் இன்றும் அவை அடையாளக் குறியீடு மட்டுமே.
இந்த நாய்கள் தமிழகத்தில் தடம் பதித்துக் கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் ஆகிவிட்டன. நம் மண்ணோடும் மக்களோடும் பழகி எளிய மக்களிடம் ஒரு அமரத்துவமான நெருக்கத்தை இந்த நாய் இனம் கண்டுள்ளது. தென் தமிழகக் கிராமங்களின் அடையாளமாக மாறி தமிழகத்தின் தனி இனம் என்கிற பெயரை கன்னி நாய் பெற்றுள்ளது. இவை வேட்டைக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டுவந்தன. 1973-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வேட்டை தடை செய்யப்பட்டது. இதனால் கன்னி நாய்கள் வேட்டைக்கான பயன்பாட்டை இழந்த போதிலும், இன்றும் அதிக அளவில் கிராமங்களில் வளர்க்கப்பட்டுவருகின்றது
*******************************************
-- இந்து தமிழ் திசை இதழில் 2017 ஆண்டு வெளியான என் கட்டுரை
படம் : 2015 ல் ( நானும் - தங்கமணியும் )

Comments
Post a Comment