குமணனின் சரித்திரத்தைப் படித்தது முதல் அதற்கான பணி
ஏப்ரல் 14, சித்திரை 1
திட்டமிட்ட பயணம், திட்டமிட்டவாறே நடந்தது. சகோதரர் பிரதீப்புக்கும், உடன்பிறப்பு மூர்த்தீஸ்வரிக்கும் நன்றிகள்.
குமணனின் சரித்திரத்தைப் படித்தது முதல் அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும் அல்லது விரைந்து எழுது வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், குமணன் குறித்தான முழுமையான தரவுகள் கிடைக்காமல் எழுதுவது சற்று சிரமமாக இருக்கும். இருந்தது. கடந்த 2023 அக்டோபரில் கூக்கால் சென்ற போது அங்கிருக்கும் சில நண்பர்கள் இதுபோன்று இங்கு சித்திரை 1 ஆம் நாள் இங்கிருக்கும் பாப்பிலியப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்தப் பகுதி மக்கள் அந்த நாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவர் என்றும், அன்று ஒரு நாள் மட்டும் அங்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவலாக அறிந்தோம்.
அது முதல் சித்திரை 1 கூக்கால் போகவேண்டும் என்ற எண்ணமிருந்து வந்தது. கடந்த கிழமை ஆனைமலை சென்றபோதும், அடுத்த கிழமை சித்திரை 1 எனவே, நாம் கூக்கல் செல்லவேண்டும் பிறகு போகலாம் என்று பேசிவிட்டு வந்தோம். இந்தக் குமணன் பயணத்தில் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று மனம் விரும்பியது. இது கடந்த 2021, 22ல் குமணன் செய்திகளை அப்பாவுடன் பாடலாக எழுதும்போது உருவானது. இருப்பினும் அவர் வருவாரா என்ற ஐயம் இருந்து வந்தது. காலக்கணிப்பில் அவரே வந்தது ஏதோ குமணனின் உண்மையான வரலாறு வெளிவரும் என்ற எண்ணம் உருவானது.
ஏனெனில் வரலாறுகளுக்கும், புரணங்களுக்கும் வேறுபாடு உள்ளது. அது போன்று இயற்கை வழிபாடுகளுக்கும், உருவ வழிபாடுகளுக்கும், சிலை வழிபாடுகளுக்கும், நடுகல் வழிபாடுகளுக்கும் மாறுபாடும் வேறுபாடும் உளது. இதனை ஓரளவிற்கேனும் சமூக பார்வையோடும், சமூகப்புரிதலோடும் வரலாற்று அறிவோடும், அதை விட இலக்கிய அறிவோடும் கொஞ்சம் பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதற்காகவே அவரை நினைத்திருந்தோம். ஆனால் வாராது வந்த மாமணியாக அவரே வந்துவிட்டார்.
அதுவும் 13 ஆம் தேதி சனிக்கிழமை வன்னீர் வலசு தோட்டத்தில் குமணன் குறித்தான உரையாடலுடன் தொடங்கி அதற்கேற்றவாறு ஒரு மாதிரி திட்டமிடலையும், குமணனின் கால அளவையும், எல்லைகளையும் பதிவுக்கேற்றவாறு வரையறுத்துக்கொண்டது கூடுதல் சிறப்பு.
கொடைக்கானல் என்பதால் வாகனம் சிவா ஓட்டாமல் பாலனை ஓட்டுவதற்காகக் கடந்த வாரமே சொல்லி அவனும் சரியாக காலை 5 மணிக்கு வந்துவிட்டான். கடந்த முறை ஆறு மணிக்கு மேல் எழுந்து 7 மணிக்கு உடுமலை வந்து பழனி மாறன். முனிசுடன் கூக்கல் சென்றதும் நினைவிற்கு வந்து சென்றது.
சித்திரை 14, அம்பேத்கர் பிறந்த நாள், ஆனால் அனைவரும் சித்திரைக்கனி, பழங்களை வைத்து வழிபாடு செய்வது மனிதர்கள் பொதுப்புத்தியான செயல். ஆனால் சிவாவும் அதிகாலையில் எழுந்து பழங்கள் வைத்து வழிபட்டு நகராட்சி எதிரில் 5.40 க்கு வந்துவிட்டார். சென்ற முறை போல் நேரம் தாழ்த்தாமல் 4 மணிக்கே எழுந்த 4.30 மணிக்கு பாலனை எழுப்பிவிட்டு, 4.40 மூர்த்தீஸ்வரி அவர்களையும் சிவாவையும் அழைத்துவிட்டு கிளம்ப மணி 5.10. வண்டி சாவி கிடைக்க மணி 5.20 .
அதிகாலை 5.25 வாகனம் எடுத்து உடுமலை வருவதற்கு 5.40 சிவாவை ஏற்றிக்கொண்டு பெட்ரோல் போட டி.சி. பங்க் செல்ல அங்கு திறக்கவில்லை. பேருந்து நிலையம் வந்து பாலன் டீ சாப்பிட ஏ.டி.எம் சென்று வர 5.50, வேகமாக அழுத்தச்சொல்ல, பாலப்பம்பட்டி, வேடபட்டி பைபாஸ் ஏறி 6.35 க்கு பழனி செல்லம் கேண்டீன், அதற்கு முன்பே 5 மணிக்கு பிரதீப் சாரையும், மூர்த்தீஸ்வரி அவர்களை அழைக்க பழனி வருவதாகச் சொல்லிவிட்டோம்.
எட்டு இட்லி, ரெண்டு ரோஸ்ட், ஒரு பொங்கல், பார்சல் ஆவதற்கு 6.50 அதற்குள் பிரதீப் சாரும் 'சார் நாங்க கொடைக்கானல் ரோடுக்கு வந்துட்டோம்' என்று சொல்ல உடனே பழனி நருக்குள் செல்ல,அங்கு அடைத்திருக்க, மீண்டும் திண்டுக்கல் மெயின் ரோடு வந்து இடும்பன் மலை வழியாக செல்லும்போது மணி 7.20, மூர்த்தீஸ்வரி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து சொல்;ல, வாகனத்தை நிறுத்தாமல் கிளம்பினோம். கொடைக்கானல் மலைப்பகுதி, நேற்று, இன்று அரசு விடுமுறை என்பதால் எக்கச்சக்கமான கூட்டமாக இருக்கும். இருந்தாலும் ஒரு 10 மணிக்கு போய்விடலாம் 12 மணிக்கு கோயிலுக்குப் போயி 3 மணிக்குத் திரும்பி மன்னவனூர் பார்த்து கொடைக்கானல் பார்த்து இரவு திரும்பிடலாம் என நினைத்து பல நினைவுகளுடன் வாகனம் மலை வளைவுகளில் சென்றது.
வரதாமாநதி, பரப்பலாறு, பொருந்தல் என நீரின் நினைவுகளோடு பொருந்தலின் அகழ்வாய்வு கனவுகளோடு, இது பேகன், ஆய் அண்டிரன் ஆட்சி செய்த பகுதி என்ற நினைவுகளோடு மலைவளங்களைக் காணும்போது மனம் மிகவும் மகிழ்வாக இருந்தது. அதிலும் இளைராஜாவின் பாடல்களோடு பயணம் செய்வது இன்னமும் கூடுதல் இன்பம். சொல்ல முடியாத உணர்வுகளை அல்லது சோகங்களை பாடல் வரிகளாக இசையோடு இன்புற்றுக் கேட்கும்போது அது ஒரு தனி சுகம். அந்த சுகத்தை அனுபவிக்க மட்டுமே இயலும், சொல்லி இன்புற இயலாது. பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும். இளையராஜாவின் பாடல் வரிகளுக்கு ஒவ்வொருவரும் அடிமையாகவும் இருப்பார்கள். அந்தவகையில் 1980 -85 வரையிலான மோகன் கிட்ஸ் பாடல்கள் மனதை அமைதியுற பாடல்கால் வைத்தது.
வேறு ஏதேனும் சிந்தனைகள், யோசனைகள் இருந்தாலும் இளையராஜாவை அதனையெல்லாம் மறக்கடிக்கச் செய்து விடுகிறார். பேகனுக்காகவும். ஆய் அண்டிரன் பற்றியும் குமணனைப் பற்றிய நினைவுகள் மெதுவாக வர, சிவாவும் பாலனும் சம்பந்தமில்லாத பேச்சுக்களால் திசை திருப்பச்செய்கின்றனர்.
இதோ இங்கிருந்து பார்த்தால் பரப்பலாறு தெரிகிறதே, வரதாமாநதி தெரிகிறது, டேம் தெரிகிறது, ஆம், பழனிக்கும், கொடைக்கானலுக்கும் ஒரு ரோப் கார் பயணம் செய்துவிட்டால் இது போன்று சாலைவழிப் பயணம் குறைந்துவிடுமே என்று மனம் எண்ணியது. எதிர்காலத்தில் இது நிகழ்ந்தாலும், நிகழலாம்.
ஓவ்வொரு நிகழ்வுக்கும் முன்னரும் பின்னரும், இப்பவே இப்படி என்றால் பழங்காலத்தில் அரசர்கள், மக்கள் எப்படி இருந்திருப்பார்கள் என எண்ணம் ஓடியது. அதற்குள் வயிறு பசிக்க பையில் இருந்த பனங்கற்கண்டு, ஆரஞ்சு பழங்கள் குறைய ஆரம்பித்தது. நேரம் 8, 8.30 , 9, 9.30 ஆக பெருமாள் மலை, வழக்கம்போல் செல்பேசி டவர் கிடைக்காததால் பிரதீப் சாருடன் மேடத்துடன் பேச இயலவில்லை. மூர்த்தீஸ்வரி அழைத்து சார் பசிக்கலீயா என்று கேட்கும் போது பசி வயிற்றைக் கிள்ளியது. பெருமாள் மலையிலிருந்து கொடைக்கானல் செல்ல போக்குவரத்து நெரில் என்று முன்னமே செய்தி தெரிந்திருந்தும் நேரே அனுபவிக்கும்போது உண்மையில் சற்று சிரமமாகத்தான் இருந்தது. மணி, 10, 10.30. 11 இன்னமும் கொடைக்கானல் வரவில்லை. 12 மணி இப்பொழுதுதான் அருங்காட்சியகம் வந்தது. அவ்வளவு நெரிசல், நாம் போட்ட திட்டங்கள் அனைத்தும் சரியாக வராது என்று உணர முடிந்தது.
வண்டி நகராமல் இன்ச் பை இன்சாக நகர்ந்தது மனதிற்குள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. ஒரு நிலையில் வண்டியிலிருந் இறங்கி நடந்து சென்று காபி குடித்து விட்டு மீண்டும் நடந்து சென்று மூர்த்தி மேடம் செல்லுக்கு டெம்பர் கிளாஸ் போட்டு , பா.மா. க. வேட்பாளர் திலகபாமா அவர்களை பார்த்து கையசைத்து புகைப்படம் எடுத்து கூட்ட நெரிசலில் நடக்க முடியாமல், நகர முடியாமல் அல்லாடிக்கொண்டிருக்கு சிவாவோ இந்த நெருக்கடியிலும் செல்பி எடுத்துக்கொண்டிருக்கிறார். என்ன செய்ய, அவரது சுபாவம், சரி இங்கே, அங்கே அலைந்து திரிந்து கொண்டிருக்கு பிரதீப் சார் அங்கே அப்படியே மாரியம்மன் கோயில் வழியாபோனா கொங்சம் நெரிசல் இல்லாமல் போயிடலாம் என்று சொல்ல சிவாவோ, ஏகெ . ஏகொ. அதெல்லாம் ஆகாது இந்த வழியாகப்போகத்தான் வேண்டும். லேக் வரை இதே போன்று இருக்கும் அதற்குப்பிறகு ப்ரீயாக இருக்கும் என்று சொல்ல, சரி என்று சொல்லி ஒரே வாகனத்தில் ஏறிச்செல்ல, வண்டி நகரவில்லை. இன்னமும் இன்ச் பை இன்ச்தான். அதற்குள் கூக்காலில் ஏற்பாடு செய்த நபர் குறைந்தது ஐந்து ஆறு முறை அழைத்திருப்பார். சார் நான் சாமி கும்பிடப்போறேன் என்று இரண்டு மணிக்கு சொல்லி சென்றுவிட்டார்.
மீண்டும் லேக் தாண்டி வானொலி நிலையம், குணா குகை திருப்பம் வரை கூட்ட நெரிசல் தீரவே இல்லை. மன்னவனூர் திருப்பம் திரும்பிய பிறகுதான் வண்டி கியர் மாற்றி நகர்ந்தது. இதற்கிடையில் பாலன் நான் வரவில்லை. இங்கே நிற்கிறேன் என்று சொல்லி வானொலி ஆராய்ச்சி நிலையம் அருகே தங்கிவிட்டான். இப்போது ஒரு வாகனத்தில் நான்கு பேர். சிவாவின் சம்பந்தமில்லாத பேச்சும், பிரதீப் சாரின் தடுமாற்றமில்லாத நகைச்சுவை உணர்வும், புன்னகையில்லாத சிரிப்பும், வாகனத்தை ஓட்டிக்கொண்டே வார்த்தை ஜாலங்கள், மேடத்திற்கும் அவருக்குமான தத்துவப்போர்கள், தீர்ந்தபாடில்லை. வாகனம் நின்று நின்று செல்ல, அப்பாடா கூக்கால் லேக் வழி வந்துவிட்டது. யாரைக் கேட்பது, . ஒருவரையும் காணோம், வேண்டாம் சார் என பிரதீப் வண்டியை விரட்ட சரியாக 2.45 மணிக்கு கூக்கால் ஏரியை அடைந்தோம்.
இதற்கிடையில் குமணன் குறித்தான பதிவுகளும், குமணன் குறித்தான பாடல்களையும் புறநானூற்றில் குமணன் சொல்லப்பட்ட விதம் குறித்தும் கேள்வி பதில் உரையாடல்களோடு குழி மேடுகளுடனான பயணமும் தொடர்ந்தது. அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்தின் நடுவே ஒரு கரும்புள்ளி போல பச்சை மேவிய வனத்தில் ஒரு கரிய நேர்கோடாக தார் சாலைகள். இடைய முப்பை பாலப்பயணம் குறித்தும், அவரின் பயண அனுபவங்கள் குறித்தும் உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டே சென்றது.
கூக்கால் ஏரியை அடுத்து மேலே செல்லும் சாலையில் பயணத்தைத் தொடங்கும் முன்பு மணி 3. ஒரு விஷப்பரிட்சை துவங்குவதாக மனம் எண்ணியது. ஏனெனில் இன்றுதான் முதன் முதலில் செல்கிறோம். அதுவும் 5 கி.மீ. மலைப்பாதை. கட்டாயம் ஒன்றரை மணி நேரம் எனில் போய்ச்சேர 4.30 அல்லது 5 வருவதற்கு 6.30 அல்லது 7 மணி ஆகவே இருட்டி விடும். இது தேவையா? எனும் மனப்பதட்டம் இருப்பினும் ஒரு விஷயங்களில் துணிந்து முடிவெடுக்கவேண்டும் என்பதாலும் மீண்டும் இந்த ஆண்டு விட்டால் அடுத்த சித்திரைக்கனி வரை காத்திருக்கவேண்டும். குமணனின் பயணம், மேலும் அறம், குமணனின் நூல் உருவாக்கம் என்பதில் மனதில் ஒரு துணிவு, மேலும், அயராத தெளிவு கட்டாயம் சென்றுவிட முடியும், மற்றும் மதிய உணவு சாப்பிடவில்லை. காரில் இருக்கும் போது இரண்டு ஆரஞ்சுப்பழங்கள் அனைவருமாக, சாப்பிட்டது. மற்றபடி 12.30 க்கு ஒரு சர்க்கரை இல்லாத காபி.மனதிற்குள் லேசான படபடப்பு இருப்பினும் மன தைரியம் நல்ல செயலுக்காகத் துணிந்து செல்வோம். நல்லதே நடக்கும் என்றவாறு முதலில் இருந்த கம்பி வேலி பயணத்தைத் தாண்டியதும் பெரிய குழி அதனுள் இறங்கி ஏற அடர்ந்த மரங்கள் காடுக்குள் பயணம். பாதை நன்றாக இருக்கிறது. ஏதும் வழி தெரியாத அளவுக்கு நெருக்கடிகள் இல்லை. ஏனெனில் காய்ந்த சருகுகள், பழுத்த இலைகள், உதிர்ந்த இலை சருகுகள் இவற்றின் மனித கால் தடங்கள். உடனடியாக இது ஏற்பட்டது. அவ்வளவு சீக்கிரம் மாறாது. வழியும் எளிமையாக இருந்தது. மனதிற்குள் பேசிக்கொண்டே செல்ல, சிவா ஆரம்பித்து விட்டார். அய்யா, இன்னும் எவ்வளவு தூரங்கய்யா, குறைந்தது ஐம்பது முறை கேட்டிருப்பார். முதல் மலை அடுத்து இரண்டாவது மலை எனும் திருப்பத்திற்குள், அடுத்த மலையேற்றம் என்பது எனக்கும் லேசான தடுமாற்றம். மனதிற்குள் உறுதி இருந்தாலும், வரக்கூடிய ஒரு சிலர் பேசும் சொற்கள் , இவுக இப்பத்தா போறாங்க, பாவம் இருட்டிடுமே, எப்படி வருவாங்க, பூசாரி கூட்டிட்டு வந்திருவாரு ' என்று சிலர் பேச, மற்றவர்கள் ஏம்பா, எந்த ஊரு 'உடுமலைப்பேட்டைங்க' ஏன் தம்பீ இவ்வளவு நேரமா, கொஞ்ச சீக்கிரமா வந்துருக்கலாமே என்று அங்கலாய்ப்புடன் அவர்கள் பேசியது நம் மீதான கரிசனத்தைக் காட்டியது.
அடுத்த மலையேற்றம் அடர்ந்த காடுகளுக்குள் சென்றது. சுத்தமான காற்று, ஆரவாரமில்லாத மரங்கள், கிளிகள் பாடல்கள், மரங்களின் அசைந்தாடும் ஒலிகள், மனதிற்கேற்றவாறு ஒரு வித சந்தோசத்தை ஏற்படுத்தியது. உண்மையில் பசிக்கவில்லை. ஏனென்றும் தெரியவில்லை. ஒரு வேளை கோயிலுக்கு போய் சேர வேண்டும் என்ற வேட்கை இருப்பதால்தான். மற்றபடி பசிக்கும் நேரம்தான், தண்ணீர் கூட அருந்த வில்லை. மரங்களோடு பேசிக்கொண்டு மனிதர்களை எதிர்கொண்டு ஒவ்வொருவரையும் முகம் பார்த்து கடந்து செல்லும்போது அவர்கள் பேசுவது இவ்வளவு நேரம் கழிச்சு வந்திருக்காங்க' என்பதை ஒவ்வொருவரும் பேச, நமக்குத் தெரிந்தது. யாரும் பிற்பகல் கோயிலுக்கு வரமாட்டார்கள். மற்றபடி இந்தப் பகுதி மக்கள் மட்டுமே இதனை வழிபடுபார்கள். வெளியார்கள் யாரும் இங்கு வரமாட்டார்கள் என்பதாகத் தெரிய வருகிறது.
முதல் மலை, இரண்டாம் மலை, என்ன தோழர் திரும்பியிடலாமா சிவாவிற்கு சொல்ல முடியாத ஏக்கம் இருப்பினும் கட்டாயம் சென்றாக வேண்டும் என்ற வேட்கை என்பதை விட ஒரு விதமான வெறி. குமணன் சார்ந்த செயல்களில் நமக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் சோதனை அல்லது முயற்சி, மற்றொரு வகையில் வெற்றி. என எவ்வாறு சொன்னாலும் நாம் இதனைக் கடந்தாக வேண்டும் என்ற மனத்திட்பத்துடன் பயணம் சென்று கொண்டிருந்தது. மூன்றாவது மலை எனத் திருப்பம் வந்தவுடன் மனதிற்கும் சின்ன அச்சம் மூர்த்தீஸ்வரி மேடம் அவர்களை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டால் பரவாயில்லை என்று மனம் எண்ணியது இவ்வாறு நினைத்துக்கொண்டே சொல்ல ஒரு கட்டத்தில் எதிரில் வந்த ஒரு கூட்டத்திடம் சொல்லிவிட்டோம். இது போன்று பெண் ஒருவரும் சிகப்பாக ஆண் ஒருவரும் வருவார்கள் அவர்களை வரவேண்டாம் என்று சொல்லி விடுங்கள் என்று சொன்ன போது அவர்களும் ஆமாம் செல்ல வியலாது நீங்களும் திரும்பியிடுங்கள் என்று சொன்னார்கள்.
இருப்பினும் முக்கால்வாசி வந்துவிட்டோம் இன்னும் கொஞ்ச தூரம் என மனதில் நினைத்துக்கொண்டு பயணம் சென்றோம். எதிரில் சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனைவரும் அந்த உள்ளூர்ப் பகுதியைச் சார்ந்தவர்கள். அவர்கள் ஆண்டுக்கொரு முறை கட்டாயம் இங்கு வந்து செல்வார்களாம். ஏனெனில் அவர்களின் முன்னோர், மூத்தோர் அவ்வாறு சொல்லிக் கொடுத்துள்ளனர். எதுக்கு என காரணம் கேட்ட போது, இங்கு வந்து ஆண்டுக்கொரு முறை கட்டாயம் வழிபட்டாக வேண்டும் என்று சாதி சமயம் இல்லாத அனைத்து மக்களும் வழிபடும் ஒரு பொதுத்தலம் என்று கூறிச்சென்றது மனதிற்குள் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஏனெனில் இந்திரவிழா, சித்திரை விழா இதெல்லாம் ஆண்டிற்கொரு முறை நடக்கும் நிகழ்வுகள் சங்க இலக்கியத்தில் கூறப்படும் வரலாற்று நிகழ்வுகளோடு இதைப் பொருத்திப் பார்க்கும் போது சித்திரை பொன்னேர் பூட்டு உழும் திருவிழா, விதைப்புத் திருவிழாவுக்கு முன்னோடி விழா, நீர் வழிபாடு, நடுகல் வழிபாடு, உறவினர்களைக் கண்டு உறவுகளைப்புதுப்பிக்கும் திருவிழா, நமது சந்ததிகளுக்கு நம் உற்றார் உறவினர்களை ஆண்டுக்கொரு முறை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, இந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு திருமணம் செய்ய வேண்டும், இந்த வீட்டில் ஆண்களுக்கு உறவு தேட வேண்டும் என்றாக உறவுகளுக்குள் ஒரு புதிய உறவை ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு மண் சார்ந்த உறவுப்பெருவிழாவாக இது இருந்துள்ளது என்பதை ஒவ்வொருவரும் பேசிக்கொண்டு வரும் சொற்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
பாப்பிலியப்பனை பார்க்க புது உடையில் வருகிறார்கள். பாப்பிலியப்பனுக்கு வேண்டுதல் இருந்ததை முடித்து வைத்திருக்க வந்துள்ளார்கள். பாப்பிலிக்கு உணவு படைக்க வந்துள்ளார்கள் எனப் பலர் பலவாறான எண்ணங்களோடு வருகை தந்துள்ளார்கள். இவை அனைத்தும் நம் முன்னோர், மூத்தோர் மண் சார்ந்த திருவிழாவினை நினைவு கூறும் வகையில் அமையும் என்றவாறே எண்ணிக்கொண்டு மனம் செல்ல, நான்காவது மலையும் வந்துவிட்டது.
ஆம், கடுமையான பள்ளத்தாக்கு இங்கிருந்து பார்த்தால் மஞ்சம்பட்டி, காந்தலூர், கீழான வயல் என மறையூர் கோரிக்கடவு பகுதி முழுமைக்கும் கண்ணுக்குத் தெரிகிறது. அவ்வளவு பெரிய பள்ளத்தாக்கு. கையில் இருந்த மரத்தைப் பிடித்துக்கொண்டு ஊன்றி நிற்க,தலை லேசாக சுற்றுமளவு தெரிந்தது. எதுவும் பேசாமல் உறுதியாக நிற்க, கை லோககுச்சியை விட்டு தளர்வதாகத் தெரிந்தது மீண்டும் இறுக்கிப்பிடிக்க , மனம் தெளிந்தது. கடுமையான கால்வலி, வேர்க்க வியர்க்க நின்று கொண்டிருக்க ஒரு பக்கம் பார்த்தால் அவ்வளவு பெரிய பள்ளத்தாக்கு இந்தப் பக்கம் மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கு நேரே கொஞ்சம் புல்வெளிகளைப் பிடித்துக்கொண்டு இடது வலது பார்க்காமல் நேரே பார்த்துக்கொண்டு மேலே செல்ல, செல்ல, இன்னும் இன்னும் கொஞ்சம் சுமார் 100 அடி சென்ற வுடன் ஒரு உயரமான மொட்டை பாறை தெரிந்தது.
ஆஹா அதுதான் கோயில், இடையில் ஏன் தம்பி இவ்வளவு சிரமப்பட்டு வர்றீங்க எந்த ஊருங்க, போங்க உங்களுக்கு அம்மா உங்களுக்கு நல்ல வழி காட்டுவா, என்று ஒரு வித உத்தரவுடன் அல்லது இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்காங்களே எனமன அமைதிக்காக கூறிய வார்த்தைகள் என்றவாறு அருகில் பார்த்தால் இரண்டு நடுகல். சமீபத்திய நடுகற்கள் என மனம் நினைத்தது. வரும் போது அதற்கு விடையும் கிடைத்தது.
கால்கள் கடுகடுக்க, நிற்க முடியாமல் கையில் குச்சி ஊன்றி இடுக்கண் உடையுழி என்று ஒரு குச்சியை சொல்வது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்று இன்று அனுபவித்து உணர முடிந்தது. நாம் இயல்பாக நடப்பதற்கும், ஒரு குச்சி ஊன்றி அதன் துணையில் நடப்பதற்கும் எவ்வளவு துணை என்பதையும் எவ்வளவு துணை என்பதையும் உணர முடிந்தது. திருவள்ளுவர் இடுக்கண் குறள் மனதில் வந்து சென்றது.
ஆம். நாம் இவ்வளவு நவீன வசதிகளோடு இங்கு வந்து செல்லும் போது எந்த வசதியும் இல்லாத காலத்தில் பெருஞ்சித்திரனார், அல்லது பெருந்தலைச்சாத்தனார் எப்படி குமணனைத் தேடி வந்திருக்க முடியும். அதுமட்டுமல்லாமல் மக்கள் எவ்வாறான மன நிலையில் வாழ்ந்திருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் போது தொலைபேசி அடித்தது எடுத்தால் பிரதீப் சார், சார் நாங்க வந்துட்டிருக்கோம், திரும்பிப் போகல' தூக்கி அடித்தது அடப்பாவமே நமக்கே இவ்வளவு சிரமம் வேர்க்க வியர்க்க நடக்க இயலவில்லை. மேடம் எப்படி வருவார்கள், என மனம் பதைபதைத்தது. பிரதீப் தான் பின்னாலிருந்தும் முன்னாலிருந்தும் வழிநடத்தி அழைத்து வந்தார் என்று கடைசியில் தெரிந்தது.
எவ்வளவு மனப்பாங்கு, இருவருக்கும் பேசும்போது கொள்கை சார்ந்தும், தத்துவம் சார்ந்தும், விடாப்பிடியாக பேசினாலும் வாழ்;க்கை வாழ்வதற்கே என்பதை எவ்வளவு இயல்பாக பொருத்திப்பார்க்க முடிகிறது. இவர்களது வாழ்க்கை உண்மையில் ஒரு உதாரணப்புரசர்களின் வாழ்க்கை என்றே எண்ணத் தோன்றுகிறது.
மேடம், மூர்த்தீஸ்வரி 37 ஆண்டு காலம் தொல்லியல் துறையில் பணியாற்றிவிட்டு இன்று வரை நமக்காக இங்கு வந்தது மிகப்பெரிய பேறு. இவர்களுக்கு இன்று பிறந்த நாள் ஏதேனும் செய்ய வேண்டுமே என்று மனம் விரும்பியது. சரி கோயிலுக்குப்போகலாம் என்று எண்ணிக்கொண்டு கால்கள் கொஞ்சம் விரைந்து நடந்தது. மனதிற்கு ஒரு வித உரம் வந்துவிட்டது. இன்னும், இன்னும் கொஞ்சம் வேகமாக கால்கள் நடந்தது எதிரில் பார்த்தவுடன் கால்கள் கொஞ்சம் நின்றுதான் சென்றது. மிகப்பெரிய பாறை, அருகில் பார்த்தால் ஒரு சிறு நடைபாதை நூலளவு கவனம் சிதறினாலும் சிரமம்தான். அருகில் நின்றவரின் கையைப்பிடித்து கொஞ்சம் மேலே ஏற்றி விடுங்கள் என்று சொன்னவுடன் அவரும் முகத்தைப் பார்த்து அருகில் உதவி செய்தார். மேலே ஏற உதவி செய்தார். இந்த சார் இதுதான் கோயில் என்று சொன்னவுடன் காலில் இருந்த சூவை கழட்டிவிட்டு வேகமாக சென்று கம்பி வேலிக்கருகே திப்பென்று விழுந்து அமர்ந்து கொண்டேன். ஒரு நிமிடம் கண் மூடித்திறந்தால் ஒரு புது உலகம் எனக்குத் தெரிந்தது.
இங்கேதான், குமணன், இங்கேதான் அரசன், அங்கேதான் மக்கள், இவ்விடத்தில் முதிரத்துக்கிழவன், இந்த மலைகள்தான் முதிர மலை, குதிரை மலை, கொய்லான் மலை, கடையெழு வள்ளல்கள் மறைந்த பின்னரும் எட்டாவது வள்ளலாக வாழ்ந்த பெருமான். குழுமூர் எனும் கொழுமத்தில் வாழ்ந்தவன். தம்பிக்காக நாட்டை விட்டுக் கொடுத்த வந்த அன்பாளன் என்று சொல்ல முடியாத மனவோட்டத்தில் குமணன் பற்றியான சிந்தனைகள் வந்த சென்றது.
ஆம் எப்படி இங்குதான் எப்படி குமணன் வாழ்ந்தான் என்று சொல்ல முடிகிறது. முடியும், ஆம் மக்கள் சொல்கிறார்கள். மன்னன் ஒருவன் இங்கிருந்தான் அவன் பெயரில் உள்ள ஊர் மன்னவனூர், பழம்புத்தூர், கீழானவயல், கூக்கல், (குமணன்கல்) மலையரிசு, இங்கிருக்கும் மக்கள் கொழுமத்திலிருந்து வந்த மண்ணடியார் சமூக மக்கள். ஆம் யாரிந்த மண்ணடியார்கள். இந்த மண்ணுக்குரியவர்கள். கொடைக்கானலுக்கு அல்ல, இந்த மன்னவனூர், கூக்கால், பழம்புத்தூர் ஊருக்குரியவர்கள். இவர்கள் அனைவருமே பூர்வீகக்குடிகள். தமிழ் பேசுபவர்கள் வேறு மொழி பேசுபவர்கள் யாரும் இதுவரையிலும் இங்கு இல்லை. இங்கு பெண் கொடுத்து பெண் எடுப்பவர்கள் கொழுமம் கொமரலிங்கம், பகுதியைச் சார்ந்தவர்கள். கொடைக்கானல் , பூம்பாறை பகுதி மக்களுடன் உறவு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை.
இவ்வாறுதான் இவர்களின் பூர்வீக குடி நமக்குத் தெரிய வருகிறது. குமணன் இருந்த மலை முதிரை மலை . இதோ தெரிகிறதே, கூக்கால் தெரிகிறது, மன்னவனூர் தெரிகிறதே, அருகில் உள்ள பகுதிகள் தெரிகிறது. ஆம் ஒரு அரசன் . தன்னுடைய அரண்மனை இருந்த இடம் போன்று தெரிகிறது. அல்லது ஒரு அரசன் இறந்து புதைக்கப்பட்ட இடமாகத் தெரிகிறது. எப்படி வரும்பொது பேசிக்கொண்டு சென்றார்கள். இங்கு வந்து சென்ற பிறகுதான் வயல் நடவு நடக்கும், திருமண பேச்ச வார்த்தைகள்நடக்கும், வீட்டில் நல்ல நிகழ்வு குறித்து பேச வேண்டும். ஏன் அரசனின் உத்தரவு மன்னரின் அனுமதி, அண்ணரின் சீதனம் என என்ன வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
இந்தப் பகுதி மக்கள் இந்த ஒரு நாள்வழிபாட்டிற்காக ஆண்டு முழுவதும் காத்திருக்கின்றனர். தம்முடைய அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு இங்கு வந்து செல்வது ஒரு கடமையாக வைத்திருக்கின்றனர். ஆம் உட்கார்;;ந்த இடத்திலிருந்து எழுந்திருக்க சற்று சிரமமாகத்தான் இருந்தது. அதற்குள் பூசாரி அவர்தான் வனக்காப்பாளர், (கார்டு) அவரது தந்தை கோபால் பூசாரி, கூக்காலிருக்கிறார். வரும்போது வீட்டுக்கு வரச்சொன்னார். இன்னொரு நாள் செல்ல வேண்டும்.
பூசையும் நடந்தது சிவா பத்து ரூபாய் போட்டு விபூதி வாங்கிக்கொண்டார். ஆம், அந்த சிலையில் கழுத்தில் மலர் மாலை, இன்று அந்த மாலை மேடம் அவர்களுக்கு கொடுத்தால் மகிழ்வார் என்றெண்ணி மேடம் வந்ததும் பூசையும் நடந்தது அதற்கு முன்பே அவரிடம் சொல்லி இவ்வாறு தொல்லியல் துறை அதிகாரி வருகிறார்.அவருக்கு இன்று பிறந்த நாள் அந்த சாமி கழுத்திலிருக்கும் மாலையை அவருக்குக்கொடுங்கள் பணம் தந்து விடுகிறேன் என்று சொன்னதும் அவர் முகம் பார்த்தார். புரிந்துகொண்டேன். அதே போன்று மேடம் வந்தது பூசையும் நடந்தது. அந்த மலர் மாலை எடுத்து அவருக்குக் கொடுக்க பூசாரி கொடுக்க அவருக்கு மனதில் அவ்வளவு பூரிப்பு. மகிழ்ச்சி. அப்படியே ரெண்டு வீடியோ, பதிவு செய்ய. அருகருகே சென்று படம் எடுக்க நேரமோ மணி ஐந்து அய்யோ, சார் கொஞ்ச வேகமாக வாங்க இருட்டிடும். முணி ஆறக்கு மேலாகிடும் என்று சொல்லி கீழே அழைத்துச்செல்ல முயற்சி செய்தார்.
இருப்பினும் பிரதீப் சாரும் மேடமும் வழக்கம் போல் படம் எடுத்துவிட்டு அவ்விடத்தை விட்டுநகர மணி 5.00 அய்யோ ஒன்றரை மணி நேரம் என்றால் இருட்டி விடும். கொஞ்சம் வேகமாக நடக்கவேண்டும். மனதிற்கும்ரெட்டிப்பு மகிழ்ச்சி சந்தோசம், நினைத்தவாறு நினைத்தவிடத்தை நினைத்த ஆளுமைகளுடன் சந்தித்தது ஏதோ குமணன் வரலாற்று நிகழ்வு இனிதே முடிந்தது போன்று இருந்தது.
மீண்டும் இறங்குமுகப் பயணம். வரும்போது பூசாரி சொன்னார் இ;ந்த நடுகல் ஒரு ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு இரு மாணவர்கள் மீது இடிவிழுந்து இறந்துவிட்டார்கள். அதன் நினைவாக நடுகற்கள் என்றார். இன்னமும் நடுகல் வழிபாடு உயிர்ப்போடு இருப்பதை நினைத்து மனதில் மகிழ்ச்சி.
அதே மலை தற்போது கொஞ்சம் வருடிக்கொடுத்தது. ஆற்றுப்படுத்தியது. அமைதிப்படுத்தியது. இப்போது கொஞ்சம் மொதுவாக. சுpவா மட்டும் எந்த ஆபத்தையும் நினையாமல் அனைத்துவிடங்களிலும் செல்பி, தற்படம் எடுத்துக்கொண்டே யிருந்தார். பல இடங்களில் ஓரமாக சென்று எடுக்கும்பொது என்னையறியாமல் நானே சத்தம் போட்டு சொல்லி விட்டேன். சிவா பாத்துங் சார், ஆனால் அவர் பார்க்க வில்லை. கிழே இறங்கும்போது பூசாரியுடன் எழுவர் வந்தனர். ஆனால் கடைசியில் சிவா முதலாக இறங்கி சென்றுவிட முதல் இரண்டு மலைகள் உடன் வந்தவர் மூன்றாவது மலையில் அவரே இறங்கிவிட்டார் நான்காவது கடைசி வந்ததும் நானே தனியாகக் காட்டுக்குள் பறவைகளுடன் குருவிகளுடன், மரங்களுடன், பேசிக்கொண்டே வந்தது மனதிற்கு ஒரு மகிழ்வையும் தன்னம்பிக்கையும் குமணனோடு ஒரு பயணம் சென்றதையும் தந்தது.
மணி 6.10 கூக்கால் லேக் வந்துவிட்டோம். மேடம் பிரதீப் வந்தது மறக்க முடியாத நிகழ்வு. மீண்டும் கூக்கால் சென்று 6.40 முகப்புக்கடையில் தோசைக்காக உட்கார்ந்து கிடைக்காமல் பருப்பி சாப்பிட்டு மீண்டும் ஒரு முருகலான , சூடான, ஆறிய சாம்பார், குழம்பு தோசை இரண்டு சாப்பிட்டு தன்னந்தனியாகப் பயணம். ஆம் நூற்றுக்கணக்கான கார்களுடன் பயணம் செய்த கொடைக்கானல் சாலை நாங்கள் வரும்போது யாரும் துணைக்கு வரவில்லை. ஆம் அனைவரும் கீழே இறங்கி அவரவர் வேலை பார்க்க சென்று விட்டனர். மணி 7.30., 8. கொடைக்கானல் லேக் வந்து அதே மாரியம்மன் கோயில் திருப்பம் வரும்போது அந்தக்கூட்டம் எல்லாம் எங்கே போனது. அவ்வளவுதான் வாழ்க்கை, இதற்கு இவ்வளவு அடிதடி, என்ன செய்ய, என்று மனம் சொல்லிக்கொண்டது.
மீண்டும் ஒரு மெஷ்சில் நின்று காபி குடித்து கீழே இறங்கி பள்ளிக்கருகே பாலன் காரில் காத்திருந்தான். பாவம் என்ன செய்ய, வந்திருந்தால் இன்னமும் சிரமம்தான். என்ன செய்ய பெட்ரோல் வேஸ்ட் , மேடம் சொன்னாங்க, சார் எக்ஸ்பென்ஸ் எழுதி வையுங்க , எதை எழுதுவது வாழ்க்கை தொலைந்து போனதே அதை எழுதவா, வாராவாரம் 200, 300 பெட்ரோல் போட்டு அலைந்தோம் அதை எழுதுவதா, நாள் கணக்கில் வரலாற்றுக்காக அலைந்தோமோ அதை எழுதிக் கணக்கிடுவதா? லட்சக்கணக்கில் தொலைத்தோமோ அந்தக் கணக்கை எழுதுவதா, இவையெல்லாம் நம்மில் உழைத்த உழைப்பிற்கு ஒரு சிலர் நன்றாக அனுபவித்து விட்டு காரித்துப்பியதைக் கணக்கிட்டு எழுதுவதா? இல்லையில்லை இப்பொழுது , எப்பொழுது நம்மை திட்டலாம் என்று காத்துக்கொண்டிருக்கும் உள்ளங்களுக்காக கணக்கு எழுதுவதா? எதை எழுதுவது, இல்லையில்லை உடுமலை வரலாற்று புது உறவுகளுக்காக அணிகலன்கள், உடைகள், இனிப்புகள் வாங்கிக்கொடுத்த கணக்கை எழுதுவதா, இவ்வாறு எண்ணிக்கொண்டிருக்க மீண்டும் மேடம் அழைத்து உங்க வீட்ல சொல்லுங்க . . .அய்யோ மீண்டும் பழையபடி . கதை எழுதனுமே என்று கார் கதவை மூட பாலன் வாகனம் எடுக்க இரவு 12 மணிக்கு பழனி அடிவாரம் வந்து சரியாக 1.10 க்கு வீட்டு க்கு வந்து தூங்கினோம். ஆம், அடுத்த களப்பயணத்திற்கு நன்றி மேடம், நன்றி பிரதீப் சார், தேங்க்ஸ் சிவா, இந்த முறை பாலனுக்கு ஒரு தேங்க்ஸ்
Comments
Post a Comment