கோவையில் முதன் முதலாக பம்ப்செட்டை உருவாக்கிய பெருமை கொண்ட - நாராயணசாமி நாயுடு:

கோவையில் முதன் முதலாக பம்ப்செட்டை உருவாக்கிய பெருமை கொண்ட - நாராயணசாமி நாயுடு: 

இன்றைக்கு கோயம்புத்தூரைச் சுற்றி கிட்டத்தட்



ட அறுநூற்றுக்கும் அதிகமான ஃபவுண்டரிகளும், பெரிய அளவில் பம்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் நிறையவே இருக்க காரணமானவர்களில் முக்கியமானவர் நாராயணசாமி நாயுடு. பெரிய அளவில் படிக்கவில்லை என்றாலும், கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கோவையில் உருவான இன்ஜினீயரிங் தொழில் நாராயணசாமி நாயுடுவையும் ஒரு பிஸினஸ்மேனாக உருவாக்கியது ஆச்சரியம் தரும் வரலாறு.

 பாப்ப நாயக்கன் பாளையத்தில்தான் நாராயணசாமி நாயுடு பிறந்தார். இவருடைய குடும்ப மும் விவசாயக் குடும்பம்தான். ஏறக்குறைய ஒரு சிறிய விவசாயியின் மகனாகவே பிறந்தார் நாராயணசாமி.

 பள்ளிப் படிப்பு அவருக்குப் பெரிய அளவில் வாய்க்க வில்லை. என்றாலும், எந்த வேலையையும் சுறுசுறுப்பாகச் செய்யும் அவரிடம், எதைக் கொடுத்தாலும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துச் சேர்க்கும் இன்ஜினீயரிங் மூளை இருந்தது. இந்த அம்சங்கள்தான் அவரை ஒரு மெக்கானிக் ஆக்கி, கோவையில் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்னும் வெள்ளைக்காரர் நடத்திய கம்பெனிக்குள் கொண்டு போய்ச் சேர்த்தது. கோவையைச் சுற்றியுள்ள ஜின்னிங் தொழிற் சாலைகளுக்குத் தேவையான இயந்திரங்களுக்கான உதிரி பாகங்களை அமைத்துத் தந்து கொண்டிருந்தார் ராபர்ட் ஸ்டேன்ஸ்.

 சில காலம் ராபர்ட் ஸ்டேன்ஸின் கம்பெனியில் வேலை பார்த்துவிட்டு, 1922-ல் புதிதாக ஒரு பட்டறையைத் தொடங்கினார் நாராயணசாமி நாயுடு. குன்னம்மா பட்டறை என்று மக்களால் அழைக்கப்பட்ட இந்த பட்டறையை லட்சுமி மில்ஸின் குப்புசாமி உள்பட ஆறுபேர் கூட்டு சேர்ந்து தொடங்கினர். கோவையைச் சுற்றி இருக்கிற டெக்ஸ்டைல் மில்கள், கரும்பு ஆலை ஆகியவற்றுக்குத் தேவையான உதிரிபாகங்களை தயார் செய்து தருவதே இந்த பட்டறையின் வேலை. காரணம், எவ்வளவு சிறிய உபகரணமாக இருந்தாலும் அதை இங்கிலாந்தில் இருந்து கொண்டு வரவேண்டிய கட்டாயம் அப்போது இருந்தது. ஆனால், பார்ட்னர்கள் எல்லோரும் ஏதோ ஒரு காரணத்தினால் பிஸியாகிவிட, குன்னம்மா பட்டறை அடுத்த சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது.

 என்றாலும், வார்ப்புத் தொழில்(கேஸ்டிங் அண்ட் மோல்டிங்) பற்றி இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார் நாராயணசாமி. கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் மிகப் பெரிய ஃபர்னஸ் ஒன்று இருந்தது. இங்கே இரும்பு உருக்கப்பட்டு, மோல்டிங் செய்வதை நேரில் பார்க்க வேண்டும் என்று நினைத்த நாராயணசாமி நாயுடு நேராக அங்கு சென்று, அந்த தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டார்.

 இதன் பிறகு 1924-ல் தனியாக ஒரு கம்பெனியை ஆரம்பித்தார். நாராயணசாமி முருக பக்தர். பழனி முருகனின் பெயரையே, தான் தொடங்கிய புதிய கம்பெனிக்கு வைத்தார். சுருக்கமாக டி.பி.எஃப். என்று அழைக்கப்படும் தண்டாயுத பாணி ஃபவுண்டரி இன்றள விலும் கோவையில் பெயர் பெற்று விளங்குகிறது.

 அப்போதுதான் கோவையில் பம்பு செட் தொழில்நுட்பம் அறிமுகமாகி இருந்தது. இந்த பம்புகளை ரிப்பேர் செய்வது அவற்றுக்குத் தேவையான சிறிய பாகங்களை உருவாக்கித் தருவது போன்ற வேலைகளையும் செய்து வந்தார் நாராயணசாமி நாயுடு. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் பம்பு பற்றிய தொழில் நுட்பத்தில் கை தேர்ந்தவரானார். நாமே பம்புகளை தயாரித்தால் என்ன என்கிற யோசனை நாராயணசாமியின் மனதில் தோன்றியது.

1928-ல் கோவையி லேயே முதன்முதலாக பெல்ட்டி னால் இயங்கும் பம்பைத் தயாரித்தார் நாராயணசாமி. அன்றைய சூழ்நிலையில் மரச் சட்டங்களை வைத்தே மோல்டிங் செய்து கொண்டி ருந்தனர். ஆனால், நாராயண சாமிதான் முதன் முதலாக இரும்புச் சட்டங்களை உருவாக்கி, மோல்டிங் செய்ய ஆரம்பித்தார். அவர் தயாரித்த பம்பு செட்டுகள் தரமிக்கதாக இருந்ததினால், இந்தியா முழுக்க ஆர்டர்கள் வந்து குவிந்தன. நாராயணசாமி நாயுடுவும் அவரது மகன் ராமசாமி நாயுடுவும் இணைந்து இந்த ஃபவுண்டரியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றிருந்தனர்.

 ஆனால், 1940-ல் நாராயண சாமியும் அதனைத் தொடர்ந்து ராமசாமி நாயுடுவும் இறந்து போனது காலத்தின் கொடுமை. என்றாலும் நாராயணசாமியின் மற்ற புதல்வர்கள் தண்டாயுத பாணி ஃபவுண்டரியை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வந்தனர்.

 1940-ல் நாராயணசாமி இறந்து போகிற சமயத்தில் கோவை, பம்பு செட்டுகளின் தலைநகரமாக ஆகி இருந்தது. முதல் முதலாக உருவான மோட்டார், முதல் முதலாக உருவான பம்பு செட்டு என்கிற இரண்டு விஷயம் சேர்ந்து கோவையை இந்தியாவின் முக்கிய வியாபார கேந்திரமாக மாற்றியிருக்கிறது. இன்றைய தேதியில் இந்தியா முழுக்க சுமார் 2,400 கோடி ரூபாய்க்கு பம்பு செட்டுகள் விற்பனையானது. இதில் கோவையின் பங்கு மட்டும் 1,200 கோடி ரூபாய்!

 தண்டாயுத பாணி ஃபவுண்டரியில் தயாரான பம்பு செட்டுகள் இந்தியா முழுமைக்கும் சென்று கொண்டிருந்தது. 1960-ல் இந்தியா முழுக்க விற்பனையான பம்பு செட்டுகளின் எண்ணிக்கை 1.10 லட்சம். இதில் 22 ஆயிரம் பம்புகளை உருவாக்கித் தந்தது தண்டாயுத பாணி ஃபவுண்டரிதான். தவிர, 1950-களிலேயே ஈரான், ஈராக், குவைத் போன்ற பல்வேறு நாடுகளுக்கு பம்பு செட்டுகளை ஏற்றுமதியும் செய்து வந்தது இந்நிறுவனம்.

 இந்த ஃபவுண்டரியில் வேலை பார்த்தவர்களே பிற்பாடு அதிலிருந்து பிரிந்து, புதிய ஃபவுண்டரிகளை உருவாக்கினார்கள். சுப்பையா ஃபவுண்டரி, விஜயா ஃபவுண்டரி, ராஜா ஃபவுண்டரி, கோபாலகிருஷ்ணா ஃபவுண்டரி உள்பட பல்வேறு ஃபவுண்டரி கள் உருவாகக் காரணமாக இருந்தது இந்த தண்டாயுத பாணி ஃபவுண்டரிதான்.

 ஆனால், 1960-களில் கோவை யில் புதிய நிறுவனங்கள் பம்பு செட்டு உற்பத்தியில் கால் பதிக்கத் தொடங்கின. 1957-ல் கோவையில் சி.ஆர்.ஐ. பம்பு நிறுவனத்தைத் தொடங்கினார் கோபால் நாயுடு. முதலில் லட்சுமி மில்லிலும் பிறகு டெக்ஸ்டூல் கம்பெனியிலும் வேலை பார்த்த கோபால் நாயுடு, ஆரம்பத்தில் பம்பு செட்டுகளுக்கான வால்வுகளை மட்டும் தயாரிக்க ஆரம்பித்தார். பிற்பாடு விவசாயம், தொழில் துறைக்குத் தேவையான பல்வேறு பம்பு செட்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தார். இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் வெளிநாடுகளுக்கும் பம்புகளை தயாரித்தளிக்கிறது சி.ஆர்.ஐ. பம்பு நிறுவனம்.

 தவிர, சுகுணா இண்டஸ்ட்ரிஸ், ஃபிஷர் பம்ப்ஸ், மஹேந்திரா பம்ப்ஸ் உள்பட பல கோவை நிறுவனங்கள் இன்று பம்ப் செட்டு உற்பத்தியில் பெயர் பெற்று விளங்குகின்றன.

📚📚✍️✍️✍️🥰🌱🌳 🌼🌹



தண்டாயுத பாணி ஃபவுண்டரியில் உடுமலைப்பேட்டை தளி ஜல்லிபட்டி பங்காருசாமி திருமலைசாமி அவர்கள் இங்கு நீண்டகாலம் இந்த நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றினார் 

கோவை அதிகாரியுடன் என்னுடைய சிறுவயது புகைப்படம் ..மலரும் நினைவுகள் 

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰