கோட்டமங்கலத்தில் வரலாற்றுச்சின்னம் – வீரக்கம்பம்

 கோட்டமங்கலத்தில் வரலாற்றுச்சின்னம் – வீரக்கம்பம்                                                       து.சுந்தரம், கோவை.





         நடுகல் வழிபாடு, தமிழகத்தில் பழங்காலந்தொட்டு இருந்து வருகிறது. வீரச்செயல் புரிந்து இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் எடுத்து, அதில் அவனுடைய உருவத்தைச்சிற்பமாக வடித்து, மாலை அணிவித்துப் படையல் இட்டு வழிபடுவது மரபு.  நடுகற்களில் காணப்படும் வீரர்கள், தங்கள் கிராமங்களில் கால்நடைகளைக் காவல் காக்கும் கடமையில் ஈடுபட்டிருக்கும்போது, கால் நடைகளைத்தாக்க வருகின்ற புலி, கரடி, பன்றி ஆகிய விலங்குகளை எதிர்த்துப் போரிடும்போது, அவ்விலங்குகளைக் கொன்ற பின்னர் அவர்களும் இறக்க நேரிடும். அவ்வாறு இறந்துபடும் வீரர்களுக்கு நினைவுச்சின்னமாக வீரக்கல் எனப்படும் நடுகல் எடுக்கப்பட்டது. இதேபோல், ஒரு கிராமத்தின் ஒரு குழுவைச்சேர்ந்த மக்களின் கால் நடைகளை, மற்றொரு ஊரின் குழுவினர் (வீரர்கள்) போரிட்டுக் கவர்ந்து செல்வதும், அவற்றை மீட்கும் முயற்சியாகப் போரிடுவதும் தொறுப்பூசல் எனக் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது. தொறுப்பூசலில் இறந்துபடும் வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் தமிழகத்தில் நிறையக்காணப்படுகின்றன.


      சில நடுகற்களில், வீரனுடைய மனைவியும் சிற்பமாகக் காட்டப்படுவதுண்டு. வீரனுடைய மனைவி, தன் கணவனின் இறப்பைத்தொடர்ந்து அவளும் தீயில் பாய்ந்து மாண்டு போவதையே இது குறிக்கும். இத்தகைய கல், மாசதிக்கல் எனப்படும். பெரும்பாலும் ஒற்றைக் கல்லிலேயே இச்சிற்பங்கள் வடிக்கப்படும். சில ந்டுகற்களில், மூன்று அடுக்குகளாகச் சிற்பங்கள் செதுக்கியிருப்பார்கள். முதல் அடுக்கில், வீரன் விலங்கோடு போரிடும் காட்சியும், இரண்டாவது அடுக்கில், உடன்கட்டை ஏறி உயிர் நீத்த வீரனின் ம்னைவி சொர்க்கம் போவதுபோன்ற காட்சியும், மூன்றாவது அடுக்கில், வீரன் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற காட்சியும் காணப்படும். (வீரன் சிவலோகம் அடைந்தான் என்பதன் குறியீடு).


      மிகவும் அரிதாக, நான்கு பக்கங்களுடைய தூண் வடிவில் அடுக்குநடுகல் சிற்பமும் காணப்படுவதுண்டு. அவ்வகை தூண் நடுகல் சிற்பம் ஒன்று, திருப்பூர்-உடுமலைச் சாலையில், குடிமங்கலத்தை அடுத்துள்ள கோட்டமங்கலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.  தஞ்சையில் இயங்கும் தமிழகத்தொல்லியல் கழகத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களான, விழுப்புரம் சி.வீரராகவன் – மங்கையர்க்கரசி, கோவை து.சுந்தரம்  ஆகியோர் உடுமலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது இந்தத் தூண் நடுகல்லைக்கண்டறிந்தனர். கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோயிலை ஒட்டியுள்ள ஊர்ப்பகுதியில் இந்தத் தூண் நடுகல் காணப்படுகிறது. ஊர் மக்கள் இதை “ மாலக்கோயில் “ என அழைக்கின்றனர். ஏறத்தாழ, 8 அடி உயரமும், 2 அடி அகலமும், 1 ¼ அடி கனமும் கொண்டு பிரமாண்டமாக நிற்கும் இந்த அடுக்கு நடுகல் தூணில் 9 அடுக்குகள் உள்ளன. இவ்வடுக்குகள், போட்டோக்களுக்கு சட்டம் அமைத்ததுபோல் நேர்த்தியாகச் செவ்வக வடிவில் பிரிக்கபட்டுள்ளன. தூணின் நான்கு முகங்களிலும் உள்ள எட்டு விளிம்புகளும் புடைப்பு அமைப்பில் வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. தூணின் உச்சி, ஒரு கோயில் கருவறை விமானம்போல் அழகுற அமைக்கப்பட்டுத் தெய்வச்சிற்பங்களைக் கொண்டுள்ளன.

      தூணுக்கு இருபுறமும், இரண்டு தனிக்கல்லில் அரசர்களின் உருவில் சிற்பங்கள். அரசர்களின் அருகில் அவர்களது மனைவியர் உருவங்கள்.  இவையும் நடுகல் சிற்பங்களே.  இவர்கள், இப்பகுதியிலிருந்த பாளையப்பட்டு  நாயக்கர்களாக இருக்கக்கூடும்.


     தூணின் நான்கு முகங்களில் மைய முகத்தில், உச்சியில் நடராசர் சிற்பம், அதன் கீழே உள்ள அடுக்குகளில் வியாக்கிரபாத முனிவர் (புலிக்கால் முனிவர்) சிவனை வழிபடும் சிற்பம், கஜலட்சுமி, குழலூதும் கண்ணன், சிவலிங்கத்தின் மீது பசு பால் சொரியும் சிற்பம், பல்லக்கேறி வீரர்கள் செல்லும் காட்சியில் சிற்பம் போன்ற பல சிற்பங்கள். தூணின் மற்ற முகங்களில், யானை,குதிரை ஆகியவற்றின் மீது வீரர்கள் அமர்ந்து போரிடும் காட்சி, வில்லேந்தி வீரர்கள் போரிடும் காட்சி ஆகிய பல்வேறு சிற்பங்கள் உள்ளன. இவை தவிர வரிசையாக வீரர்கள் மற்றும் பெண்கள் (உடன்கட்டை ஏறிய மனைவியர்களாக இருக்கக்கூடும்) ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. பெண்கள் வில்லேந்திப் போரிடும் காட்சியில் அமைந்த சிற்பங்கள் என,  நூற்றுக்கும் மேற்பட்ட உருவங்கள் தூணில் காணப்படுவதை ஆய்ந்து நோக்கும்போது, ஒரு போர்ச்சூழலில் இறந்து போன பெரும் வீரர்களுக்கும், அவர் மனைவிமார்க்கும், பாளையப்பட்டுக் குறு நில மன்னர் நிலையில் இருந்தவர்க்கும் எடுக்கப்பட்ட மிகப்பெரிய  நினைவுக்கல்லாக இதைக் கருத வேண்டும். தூணின் உயரம், பெரும் வடிவம், நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் சிற்பங்கள், சிற்பங்களின்   நேர்த்தியான வேலைப்பாடுகள், அதன் ஒட்டுமொத்த பிரமாண்டம், பக்கத்திலே உள்ள வேலைப்பாடுகள் மிகுந்த தனிச் சிற்பங்கள் ஆகியவற்றை நோக்கும்போது மிகவும் முக்கியமான நிகழ்வு கருதி இந்த நினைவுத்தூண் எழுப்பப்பட்டிருக்கவேண்டும் என்பதையும், நினைவுத்தூண் எழுப்பியவரும் ஒரு முக்கியத்துவம் நிறைந்த பெரிய பதவியில் இருந்த தலைவராகத்தான் இருந்திருக்கவேண்டும் எனவும் கருதலாம். இக்கருத்தை, இவ்வூர்ப் பெரியவர்கள் கூறும்-மரபு வழியில் காப்பாற்றி வைத்திருக்கும்-செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

 

      நினைவுத்தூண் அமைந்துள்ள இந்த மாலக்கோயிலில் வழிபாடு நடத்துபவர்கள் இங்குள்ள “ பாலவாரு “  குலத்தவர். இவர்கள், ராஜ கம்பள நாயக்கர் வழி வந்தவர்கள்.

ராஜ கம்பள நாயக்கர் மொத்தம் ஒன்பது வகையினர் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களுக்குக் குலதெய்வம் வல்லக்கொண்டீசுவரி என்னும் வல்லக்கொண்டம்மன் ஆகும். இந்தப் பாலவாரு குலத்தினர் திருமணச் சம்பந்தம் வைத்திருப்பது சில்லண்ணவார் குலத்தில். இந்தப் பாலவார் மக்கள், இந்த மாலக்கோயிலில் வாரத்துக்கு இருமுறை திங்கள், வெள்ளி ஆகிய நாள்களில் பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர். ஆண்டுக்கொருமுறை, மாசி மாதம் மகாசிவராத்திரியன்று இரவு 12 மணியளவில் வல்லக்கொண்டம்மனுக்குத் திருக்கல்யாணம்  நடத்தி, அன்னதானம் செய்து சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். குலதெய்வப்பாடல்களாக இங்குள்ள மூதாட்டிகள் பாடும் நாட்டுப்பாடல்களில் போர் பற்றிய செய்திகளும், பாளையப்பட்டுத் தலைவர்களின் பல்வேறு பெயர்களும் காணப்படுவதாகச் சொல்கிறார்கள்.


      மேலே கூறப்பட்ட மரபு சார்ந்த செய்திகளை உறுதிப்படுத்துவதுபோல், தூணின் மைய முகத்தில் அமைந்துள்ள புடைப்பு விளிம்புகளில், கல்வெட்டு எழுத்துகள் காணப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் மூவரும், இந்த எழுத்துகளை ஆய்ந்து படித்து அதில் உள்ள செய்திகளை அறிந்தனர்.

கல்வெட்டு வரிகள் கீழே உள்ளவாறு படிக்கப்பட்டன.


                      சிறீமுக வருடம் ஆடி மாதம் 8 தேதி ஏகாதெசி

              பெற்ற திங்கள் கிளமை னாள்

              பாலவாரில் காம நாயக்கர் மகன்

              வல்லைக்கொண்டம நாயக்கர் உண்டாக்கின

              வீரகம்பம்.



தமிழ் வருடமான ஸ்ரீமுக ஆண்டில், ஆடி மாதம் எட்டாம் தேதி ஏகாதசி நாளன்று, பாலவார் குலத்தைச்சேர்ந்த காம நாயக்கர் மகன் வல்லக்கொண்டம நாயக்கர் என்பார் இந்த நினைவுச்சின்னமான வீரகம்பத்தை நிறுவினார் என்பது கல்வெட்டுச்செய்தி.


      கல்வெட்டில் வரும் “ பாலவார் “ என்னும் சொல், இந்த நினைவுச்சின்னத்தை வழிபட்டு வரும் இவ்வூர் பாலவார் மக்களே என்று உறுதி செய்கிறது. ” வீரகம்பம் ” என்பது வீரக்கல் அல்லது நடுகல், தூண் ( கம்பம் ) வடிவில் எழுப்பப்பட்டதை உறுதி செய்கிறது. ஸ்ரீமுக ஆண்டு, கி.பி. 1693, கி.பி. 1753 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் பொருந்தி வரும் ஆண்டாகும். கி.பி. 1693-ஆம் ஆண்டு, பாளையக்கார நாயக்கர்களின் காலத்தை ஒட்டிவருவதால் இந்த வீரகம்பமானது, பாலவார் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த வல்லைக்கொண்டம நாயக்கர் என்பவரால் எடுப்பிக்கப்பட்டது எனக்கொள்ளலாம். இவர் பெயரும், இக்குலத்தவரின் குலதெய்வமான வல்லக்கொண்டம்மனுடன் இயைந்து போவதைப்பார்க்கிறோம். மேலும், கி.பி. 1693-ஆம் ஆண்டுக்காலகட்டத்தில் கம்மவாரு, கொல்லவாரு ஆகிய பாளையக்கார நாயக்கர்கள் மதுரை நாயக்க அரசர்களுக்குக் கீழ்ப்படிந்து ஆட்சி செய்து வந்தனர் என்பதைக்கொண்டு இக்கல்வெட்டு மற்றும் இந்த வீரகம்பத்தின் காலம் கி.பி. 1693 எனக்கொள்வதில் தவறில்லை.


      குலதெய்வ வழிபாடு நடத்துவதன் மூலம், பாலவார் குல மக்கள் இந்த வரலாற்றுச் சிறப்புடைய தூண் நடுகல்லைப் பாதுகாத்து வருகிறார்கள் என்பதோடு தொடர்ந்து பாதுகாப்பார்கள் என்பது திண்ணம்.



து.சுந்தரம்,

கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰