கேள்வி : 


நீங்கள் கல்லும் மண்ணும் சுமந்து கட்டப்பட்ட வீட்டிற்கு போனபோது உங்களுக்கு அதிக வரவேற்பில்லாமல் அமரவைக்கப்பட்டு இருக்கும் அந்த சில நிமிஷங்களில் என்னவெல்லாம் தோன்றும்?

 

 என் பதில் : 


 

கல்லும் மண்ணும் உண்மையாகவே சுமந்து வீடு கட்டியோர் ,

 

இந்தத் தலைமுறையிலேயே அதிகம் பேர் இருக்க வாய்ப்பில்லை. அதிகபட்சம் கடன் வாங்கி, கட்டுமான வல்லுனர் (என்று நம்பப்படும்!) ஒருவரிடம் ஒப்பந்தம் போட்டோ, போடாமலோ, பல தொழிலாளர்களைக் கொண்டு வீடு கட்டியிருக்கலாம். அல்லது, ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டை வாங்கியிருக்கலாம். இதுதான் நிதர்சனம். நிற்க.


கல்லும் மண்ணும் சுமந்து கட்டியதோ, கடன் வாங்கி காண்டிராக்டர் மூலம் கட்டியதோ, வீட்டை வாடகைக்கு (அக்காலத்தில் 'ஒத்திக்கு' - தற்போது இது பரவலாகப் பயன்பாட்டில் உள்ளதாகத் தெரியவில்லை!) விட்டுவிட்டோமென்றால், பின்னர் அங்கு நுழையும் போதெல்லாம், தங்களது வினாவிலுள்ள மாதிரியான நிலைதான் பெரும்பாலும்.


பொதுவாக வீட்டுச் சொந்தக்காரருக்கும், வாடகைதாரருக்கும் உள்ள உறவானது ஏன் அமெரிக்க-ரஷ்யா உறவு மாதிரியோ, ச்சைனா-தாய்வான் உறவு மாதிரியோ இருக்கிறதுஎதனால் துரியோதனன்-கர்ணன் மாதிரியோ, கிருஷ்ண பரமாத்மா-அர்ஜுனன் மாதிரியோ இருப்பதில்லை என்பதை ஆய்வு செய்தால், முனைவர் ஆவது திண்ணம்.


அடியேன் கோவையில் ..வாடகைதாரராகவும் சில வீடுகளில் வசித்துள்ளேன். தற்போது வாடகைக்கு விடப்பட்டிருக்கும் ஒரு அடுக்கக வீட்டின் சொந்தக்காரராகவும் இருக்கின்றேன். அட ஒரே ஒரு வீடுதாங்க.. மொத்த அடுக்ககமும் என்னோடதா இருந்தா, இங்க பதிலெழுதுவதற்கெல்லாம் நேரமிருக்குமா என்ன!


வாடகைக்கு வசித்த இடங்களில், ஒரே ஒரு வீட்டில் மட்டும்தான், அதன் சொந்தக்காரர்கள் (அதே வீட்டின் மாடியில் வசித்தனர்) கிட்டத்தட்ட எங்களது பெற்றோரைப் போல நடந்து கொண்டனர் (உரிமையோடு அவ்வப்போது வீசும் வசவுகள் இல்லாமல்). அந்த உரிமையாளர் அருகில் இருந்த ஒரு மனையை எனக்கு வாங்கித் தருவதற்கு முன்வந்தபோது, எதிர்காலம் பற்றிய தொலைநோக்குப் பார்வை அப்போது இல்லாத காரணத்தால், அவ்வரிய வாய்ப்பைக் கோட்டை விட்டேன். மற்ற வீடுகளில் எல்லாம், உரிமையாளருடனான உறவு ஸ்ட்ரிக்ட்லி டிரான்ஸாக்ஷனல்தான். ஆனால் யாருடனும் பஞ்சாயத்தெல்லாம் செய்ததில்லை; சுமுகமான தொடர்புதான்.



என்னுடைய வீட்டில் வசிக்கும் வாடகைதாரரை நான் சந்திப்பது, வாடகை ஒப்பந்தத்தில் கையொப்பமிடவும், புதிதாகக் குடிவருவோராக இருந்தால் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காகவும்தான் (கேஷ் டீலிங் செய்யும் பலர் இன்னமும் இந்த டிஜிட்டல் யுகத்தில் கூட உள்ளனர் - அடியேன் சில ஆண்டுகளுக்கு முன்பே மைக்ரேட் ஆகிவிட்டேன்). அனாவசிய அலைபேசி உரையாடல்கள், வாட்ஸாப் பரிமாற்றங்களெல்லாம் அவர்களுடன் வைத்துக் கொள்வதில்லை.


வாடகைக்கு விட்ட வீட்டில் ஏதேனும் பழுதானால், மின் பணியாளர், தச்சர், கொத்தனார், குழாய் சரிசெய்பவர் போன்ற வல்லுனர்களைப் பல வருடங்களாக அறிந்து, செவ்வனே பயன்படுத்திய அனுபவம் உள்ளவரென்பதால், வாடகைதாரருடனான தொடர்பையெல்லாம் இல்லத்தரசியிடம் ஒளட்சோர்ஸ் பண்ணிவிட்டேன். ஒப்பந்தமும் அவர் பெயரில்தான்; வாடகையும் நேராக அவரது வங்கிக் கணக்கிற்கே போய்விடும் என்பதால், அவரும் ஆர்வத்துடன் இதை எதிர்கொள்வதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன!



வாடகைக்கு விடும்வரைதான் அது நம்முடைய இல்லம். விட்டபின்னரும் அதை நாம் வசிக்கும் இல்லமாகவே கருதி, அதன் மீது பற்றுவைப்பதுதான் பிரச்சினைக்கு காரணம். வாடகைதாரர் குடியிருக்கும்வரை அது அவருடைய இருப்பிடம் என்று நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்ள வேண்டியது அவசியம்.


அத்தகைய தெளிவு சொந்தக்காரரிடம் இல்லாவிட்டால், எப்போதாவது அந்த வீட்டிற்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் கூட, சொந்த வீட்டைப் போல அங்குமிங்கும் புகுந்து புறப்பட்டு, 'ஐயோ, என்னங்க இது.. இது பூஜை அலமாரி ஆச்சே.. இதுல போயி என்னத்தையோ குப்பை மாதிரி குமிச்சு வெச்சிருக்கீங்க..' என்றெல்லாம் டென்ஷன் ஆகிவிடுவோம்.


குடியிருப்பவர் இறை நம்பிக்கை அற்றவராக இருந்தால், அவருக்கு பூஜை அறையும், தேவையற்ற பொருட்களைக் குவித்து வைக்கும் சரக்கு அறையும் வெவ்வேறல்ல. அல்லது, அவர்கள் பூஜை அறைக்கு பதிலாக சின்னதாக ஒரு பூஜை அலமாரியை வேறெங்காவது வைத்திருக்கலாம். அவர்களுக்கு எது சரிப்பட்டு வருமோ, அதைத்தானே அவர்கள் கடைப்பிடிப்பார்கள்.


உதாரணமாக, வீட்டைப் புதிதாக ஒருவருக்கு வாடகைக்கு விடும் முன்னர், அங்கு மராமத்து வேலைகளைச் செய்யும் சில நாட்கள் / வாரங்களுக்கு, நாங்கள் வழிபடும் தேவியின் திருவுருவப் படத்தை அங்கு வைத்து, தினசரி விளக்கேற்றி வைப்பது எங்களது வழக்கம். ஒரு வாடகைதாரரிடம்,


'நீங்கள் வழிபடாவிட்டாலும், தேவியின் படத்தை, ஹாலில் உள்ள ஷோகேஸ் உள்ளாவது வைத்துக் கொள்ள முடியுமா?,' என்று கேட்டபோது, அவர்கள் ஒப்புக் கொண்டனர். அவர்கள் வீட்டைக் காலி செய்தபோது, தேவியின் திருவுருவப் படம் அந்த ஷோகேஸில்தான் இருந்தது.


அதற்குப் பின்னர் வந்த ஒரு இளைய தம்பதியினர், ', மிகவும் அழகாக உள்ளதே இந்த தேவியின் திருவுருவம்.. நாங்கள் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டுமென்றால் ஏதேனும் குறிப்பாகச் செய்ய வேண்டுமா!' என்று எங்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அவளை வழிபடவே செய்தனர். இருவரையுமே நாங்கள் எவ்விதத்திலும் கட்டாயப்படுத்த முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி ..வணக்கம் 


உங்கள் கனவு இல்லம் வாடகை வீட்டில் இருந்து ..உங்கள் சொந்த வீடாக மாற வாழ்த்துக்கள் ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰